Wednesday, January 3, 2007

சபரி மலையின் 18 படிகளும் 18 விதிமுறைகளும்


ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் மிகச்சிறந்த சீடரான சுவாமி பரமார்த்தானந்தா சபரி மலையின் 18 படிகளுக்கும் 18 விதிமுறைகளை விளக்கி நாம் எப்படி மோட்சத்தை அடையலாம் என்று வழி காட்டுகிறார்.


1ம் படி -அஹிம்சை : உடலாலோ, வாக்காலோ அல்லது மனதளவிலோ கூட பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது அஹிம்சை.


2ம் படி - வாய்மை : பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். நேர்மையாக நடக்க வேண்டும் இது வாய்மை.

3ம் படி - திருடாமை : பிறர் பொருளை அபகரிப்பது மட்டும் திருட்டு அல்ல. பிறருக்கு நியாயமாக சேரவேண்டியதை, தர வேண்டியதை கொடுக்காமல் இருப்பதும்/குறைத்து கொடுப்பதும் கூட திருட்டே ஆகும்.


4ம் படி - ப்ரஹமசர்யம் : குடும்பஸ்தராக இருந்த போதிலும் இந்த விரத நாட்களில் பிரம்மச் சர்யத்தை கடைபிடிக்க வேண்டும்.

5ம் படி - பிறர் பொருள் விரும்பாமை: நமக்கு சேர வேண்டியது அல்லாத, இலவசமாக பிறர் கொடுக்கும் எதையும் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் .

6ம் படி - சுத்தம் : உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் தூய்மைக்கு 2 வேளை குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு பூஜை, இறைவனை போற்றுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

7ம் படி - மனநிறைவு : நம்மிடம் இருப்பதில் திருப்தி அடைவது, அத்யாவசிய பொருள்களை தவிர மற்றவற்றை நாடாமல் இருப்பது.

8ம் படி - தவம் : உணவு விரதங்கள், செருப்பு போடாமல் இருத்தல் போன்ற நியமங்களை முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.

9ம் படி - சாஸ்திரம் படித்தல் : வேதங்கள், பகவத்கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம், ஐயப்ப சரிதம், தேவாரம், திருவாசகம் போன்ற சாஸ்திரங்களை (எந்த மொழியிலும் ) தினமும் படிக்க வேண்டும்.

10ம் படி - அடைக்கலம் : பொருள் மற்றும் உறவுகளைவிட பகவானையே சகலமும் என சரணடைய வேண்டும்.

11ம் படி - த்யானத்தில் அமர்தல் : சுத்தமான இடத்தில் நேராக, ஸ்திரமாக, சுகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

12ம் படி - சுவாசப்பயிற்சி : 12 முறை மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் .

13ம் படி - புலன் அடக்கம் : ஐம்புலன்களை உலக விஷயங்களின்பால் செலுத்தாமல் இருக்க வேண்டும் .

14ம் படி -இறைவனுடன் ஒன்றுதல்: அலைபாயும் மனதை இறைவனிடம் மட்டுமே செலுத்துதல்.

15ம் படி - த்யானம் : இறைவனின்பால் செலுத்திய மனதை தொடர்ந்து அதே நிலையில் வைத்திருத்தல் .

16ம் படி - ஸமாதி நிலை : இறைச் சிந்தனையை தவிர வேறெதுவுமற்ற நிலையில் ஆழ்ந்து இருத்தல்.

17ம் படி - பாபத்தை துறத்தல்.

18ம் படி - புண்ணியத்தை துறத்தல்.

மேலே சொன்னவற்றில் 16 படிகளை கடப்பது நம் முயற்சியில் உள்ளது. 16 படிகளை சிரத்தையுடன் கடந்தால் 17-18 ம் படிகளை கடக்க ஐயப்பனே நம் கைபிடித்து அழைத்துச் செல்வார்.

நெய் அபிஷேகம் இறைவனுடன் நமது ஐக்கியத்தை விளக்கும் . சபரிமலை ஐயப்பனே ஆதிகுரு . தர்ம சாஸ்தா என்றால் - சாஸ்திரத்தை கற்பிக்கும் குரு. குருவான அவரே ஸ்வாமியாகவும் இருப்பதால் நம் எல்லோருக்கும் குருஸ்வாமியாக இருக்கிறார். சரி ஏன் இந்த விரதத்தை குறிப்பிட 48/60 நாட்களில் மேற்கொள்ள வேண்டும்? பரீட்சார்த்தமாக இந்த கால கட்டத்தில் நாம் முயற்சி செய்து வெற்றி பெறுவதால் , பிறகு அதை ஆண்டு முழுவதற்கும் நீட்டிக்கலாம். பிறகு வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடித்து இந்த வாழ்வில் முழுமை பெறலாம்.

ஐயப்பன்காட்டும் சின் முத்திரையில், கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கிறது. ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிக்கிறது . கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் சேரும் பொழுது வாழ்க்கை பூரணமடைகிறது. இந்த ஜீவ, பிரம்ம ஐக்கியத்தை குறிப்பது சின் முத்ரா. அதுவே நாம் பதினெட்டு படிகளையும் கடந்தவுடன் காணும் "தத்துவமஸி " (அதுவே நீயாக இருக்கிறாய்).

No comments: